முத்துப்பேட்டை அருகே தர்கா கந்தூரி விழா ரத ஊர்வலத்தில் மோதல்: பூப்பல்லக்கு உடைப்பு
Posted April 10, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற ஹஜ்ரத் அபூபக்கர் நெய்னா முகமது ஒலியுல்லாஹ் ஆண்டவர் தர்காவின் 190–ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக முகைதீன் ஆண்டவர் பள்ளியிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப் பல்லக்கு கண்ணாடி ரத ஊர்வலம் புறப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் வழியாக வந்தது. அப்பொழுது அந்த அமைப்பினர் ஊர்வலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்தனர். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும், கந்தூரி கமிட்டியினருக்கும் தகராறு ஏற்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த பாருக் தலைமையில் சிலர் ஊர்வலத்தில் வந்த பூப்பல்லக்கை அடித்து உடைத்தனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதில் தவ்ஹீத்ஜமாஅத் பள்ளிவாசலின் கண்ணாடி கள் மற்றும் விளம்பர போர்டுகள் சேதமாகியது. அப்போது அங்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் தலையிட்டு இருதரப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் கந்தூரி விழா கமிட்டியினர் ஊர்வலத்தை எடுத்து செல்ல மறுத்தனர். போலீசார் சமரச பேச்சுக்கு பிறகு அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு நாச்சிக்குளம் கடைத்தெரு வந்தது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு தர்காவை வந்தடைந்தது. பின்னர்; புனித மவுலத் ஓதப்பட்டது.
அதன் பிறகு நடைபெற்ற கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.தமீம்அன்சாரி சாகிப் முன்னிலை வகித்தார். பின்னர் துஆ ஓதப்பட்டு புனிதகொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதில் தர்ஹா கந்தூரி விழா கமிட்டி தலைவர் சேக் தாவூது, துணைத் தலைவர் அமினல் உசேன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாச்சிக்குளம் முகைதீன் பிச்சை மற்றும் ஊர் ஜமாத்தார்கள், கிராமமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தர்கா கந்தூரி விழா கமிட்டி தலைவர் சேக்தாவூது முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் கந்தூரி ஊர்வலத்தை வழிமறைத்து பூப்பல்லாக்கை சேதப்படுத்தியதாக தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த பாருக், அலீம், சமீர்அகமது, யூசுப், செல்லப்பா, யூசுப்கான், சலீம்முகமது, ஹாஜா மைதீன், அசாருதீன், சாதிக், சிராஜ், தீன்முகமது, அப்துல்ரஜாக் உட்பட 15 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகி அசாருதீன் கொடுத்துள்ள புகாரில் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை, கந்தூரி விழா கமிட்டியை சேர்ந்த உதுமான் அலி, அசரப் அலி, தமிம், சமீர், சாகுல், நாசர், சதாம்உசேன் உட்பட 25 பேர் சேதப்படுத்தியதாக புகார் கொடுத்து உள்ளனர்.இருதரப்பு புகார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தை நேற்று நள்ளிரவு திருச்சி எஸ்.பி சக்திவேல், திருவாரூர் ஏ.டி.எஸ்.பி முத்தரசன், முத்துப்பேட்டை டி.எஸ்.பி அருண், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், திருக்களார் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் உட்பட போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளதால் அப்பகுதியில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே தர்கா கந்தூரி விழா ரத ஊர்வலத்தில் மோதல்: பூப்பல்லக்கு உடைப்பு”