தனியார் பள்ளிகளில் 3778 மாணவர்களுக்கு இலவச கல்வி: கலெக்டர் தகவல்

Posted May 16, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்ட தனியார் பள்ளிகளில் 3778 மாணவர்களுக்கு இலவச கல்வி: கலெக்டர் தகவல்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கான இலவச கல்வி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர்
சுப்பையன், தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:–
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான கல்வி, கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்த பட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டமும் முன்னோடி மாவட்டமாக விளங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 25 விழுக்காடு சேர்க்கைகான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டம் முழுமையாக செயல்படுத்திட கேட்டுக்கொள்கிறேன்.
2015–16 இக்கல்வியாண்டு முதல் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள் மற்றும் 25 விழுக்காடு இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், உள்ளுர் செய்தித்தாள்கள், அலுவலக தகவல் பலகைகள், பள்ளி தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்தல் வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் இது தொடர்பான விளம்பர பலகை அமைக்க வேண்டும்.
அரசாணையின்படி 25 விழுக்காடு சேர்க்கைக்கு 4.5.2015 முதல் 19.5.2015 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை அனைத்து பள்ளிக் கூடங்களில் விநியோகிக்கப்படும். மேலும், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை வருகிற 19–ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் பெற்றோர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
25 விழுக்காடு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம் வருகிற 25–ந்தேதி மாலை பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 194 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீட்டின் படி 2033 இடங்களும், 91 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி 1519 இடங்களும், ஒரு மேல்நிலைபள்ளியில் 25 சதவிகித ஒதுக்கீட்டின் படி 8 இடங்களும், 16 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீட்டின் படி 218 இடங்களும், ஆக மொத்தம் 302 பள்ளிகளில் 3778 இடங்களில் சேர்க்கை செய்யப்படும்.
25 சதவிகிதவிழுக்காடு சேர்க்கையினை செயல்படுத்தாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவுற்ற பிரிவினர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பள்ளிக்குமிடையேயான தூரம் 3 கிலோ மீட்டர் இருக்க வேண்டும்.
2015–16–ம் கல்வியாண்டில் ஜூன் மாதம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும், திறப்பதற்கு தலைமையாசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசு வழங்கும் 14 வகையான உதவிகளான புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



0 comment(s) to... “தனியார் பள்ளிகளில் 3778 மாணவர்களுக்கு இலவச கல்வி: கலெக்டர் தகவல்”