பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம்: கலெக்டர் சுப்பையன் தகவல்
Posted July 04, 2014 by Adiraivanavil inதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் என்.சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது:–
பட்டுக்கோட்டை சாந்தான்காடு பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும்சுற்றுலாத்துறை உதவியுடன் ரூ.75 லட்சம் மதிப்பில் காந்தி பூங்கா புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படுவதுடன் நடைபாதையும் அமைக்கப்படும்.அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலைய காலி இடத்தில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், சுத்தமாகவும், சுகாதாரமாக வைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக சிறுநீர் கழிப்பதற்காக சிறுநீர் கழிப்பறை அமைக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் நெரிசலை குறைப்பதற்கு பேருந்து நிலையத்தில் உள்ள காலி இடத்தில் அடுக்கு மாடி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடியம்மன் கோவில் ஏரிகரையில், நடைபாதை ஒருபகுதி முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் பங்களிப்புடன் விரைவில் நடைபாதை அமைக்கப்படும். மேலும், ஏரி ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலை 1 கிலோ மீட்டர் அளவிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை 1 கிமீ. நீளத்திற்கும் 10 மீட்டர் அகலத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கோரிக்கைக்கேற்ப பண்ண வயல் சாலையில் ஓடக்கரை ஏரி அருகே லாரிகள் நிறுத்துவதற்கு இடம் சுத்தம் செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரப்பெற்றுள்ளது.பட்டுக்கோட்டை நகராட்சி–தஞ்சாவூர் சாலை ஆலடிக்குமுளையிலிருந்து மதுக்கூர் சாலை, பாபிபா வெளிப்பாளையம் வழியாக சூரப்பள்ளம் வரை 3.2 கிமீ அளவிற்கு ரூ.22 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வளர்ச்சிப் பணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிகளுடன் நகர வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலை மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.தர்மராஜன், நகர் மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, துணைத்தலைவர் வி.கே.டி.பாரதி, ஆணையர் ரெங்கராஜன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர் திருவள்ளுவன், நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் மோகனா, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தர்மலிங்கம், நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சண்முகவேல், டாக்டர் பாஸ்கரன், மின்வாரிய செயற்பொறியாளர் சின்னையன், வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம்: கலெக்டர் சுப்பையன் தகவல்”