தஞ்சையில் ராணுவத்தில் சேர குவிந்த இளைஞர்கள்

Posted June 11, 2014 by Adiraivanavil in
ஜூன்.11–
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.
இதில் தஞ்சை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், காரைக்கால், மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள அதிகாலை முதலே மைதானத்துக்கு வெளியே ஆர்வமுடன் காத்திருந்தனர்.
பின்னர் காலை 5 மணிமுதல் இளைஞர்கள் அனைவரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அவர்கள் ஊர்வாரியாக வரிசையாக அமர்த்தப்பட்டனர்.
இந்த முகாமானது 9 நாட்கள் நடைபெறுகிறது. முகாமின் முதல் நாளான இன்று இளைஞர்கள் அனைவருக்கும் உயரம் சரிபார்த்தல், மார்பளவு சரிபார்த்தல், எடை ஆகியவைகள் சரி பார்க்கப்படுகிறது.
பின்னர் இருப்பிடச் சான்று, பள்ளி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது. இவை அனைத்திலும் தகுதி உடையவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதில் தகுதி பெறும் இளைஞர்கள் மட்டும் ராணுவத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
முகாம் நடைபெறும் நாட்களில் பஸ்கள் அனைத்தும் அன்னை சத்யா விளையாட்டு அரங்கு அருகில் நின்று செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி முகாம் நடக்கும் இடத்தில் கழிவறை, தண்ணீர் வசதி, தீயணைப்பு, சுகாதார துறையினர், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவுடன் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது.


0 comment(s) to... “தஞ்சையில் ராணுவத்தில் சேர குவிந்த இளைஞர்கள்”