முத்துப்பேட்டை பகுதியில் தற்பொழுது வடக்கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் இப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இரை தேடவும் இனப் பெருக்கத்துக்காகவும் குவிந்துள்ளது. இந்த நிலையில் பறவைகளை சமூக விரோதிகள் சிலர் உணவுக்காகவும் விற்னைக்காகவும் வேட்டையாடி வருகின்றனர். இதனை தடுக்க திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் கருணை பிரியா மற்றும் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உத்தரவுப்படி முத்துப்பேட்டை வன சரகர் அயூப்கான் தலைமையில் வனபாதுகாவாலர்கள் சிவநேசன், மாரிமுத்து, சின்னப்பன். வேட்டைத்தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜன், செல்வராஜ், செல்வகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை கடந்த சில நாட்களாக இரவு, பகலில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டியக்காடு பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் தொண்டியக்காடு அளம் பகுதியில் சோதனையிட்டபோது தொண்டியக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் வலைவிரித்து கூழைக்கிடா என்ற பறவையை பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த கூழைக்கிடா பறவையை பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை வன சரகர் அயூப்கான் கூறுகையில்: பறவைகளை பிடிப்பது கண்ணி மற்றும் வலை வைத்து வேட்டையாடி பிடிப்பது, விற்பது இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குறைந்தபட்சம் 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுப்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை