அதிரை அருகே கடலில் கரை ஒதுங்கிய 45 அடி நீள திமிங்கலம்-பரபரப்பு
Posted October 24, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கணேசபுரம் கடற்பகுதில் இருந்து 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, கட்டுமாவடி கடற்கரையில் இருந்து சுமார் 2 மைல் தொலைவில், சுமார் 20 அடி நீளத்தில் ஒரு மர்ம பொருள் கடலில் மிதப்பதை கண்டனர். இதையடுத்து மீனவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அந்த திமிங்கலத்தை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், கணேசபுரம் பகுதியில் திமிங்கலங்கள் கிடையாது. அவை ராமேசுவரம் ஆழ்கடல் பகுதியில் தான் அதிகம் உள்ளன. எனவே இந்த திமிங்கலமும் நோயுற்றதால் ராமேசுவரம் பகுதியில் இறந்து, கணேசபுரம் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம். இதுகுறித்து மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினர். மேலும் இறந்த திமிங்கலம் 45 அடி நீளமும், 12 அடி அகலமும் இருந்ததாகவும், இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து மீனவர் கந்தசாமி கூறியதாவது:–
கடலில் இருந்து 2 மைல் தொலைவில் 45 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட திமிங்கலம் இறந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை அதிகாரிகள் அப்புறப்படுத்தவில்லை என்றால் கடற்கரை ஓரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த திமிங்கலத்தை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இறந்து கரை ஒதுங்கி கிடக்கும் திமிங்கலத்தை பார்க்க ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
0 comment(s) to... “அதிரை அருகே கடலில் கரை ஒதுங்கிய 45 அடி நீள திமிங்கலம்-பரபரப்பு”