மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு 2 பேர் கைது

Posted October 19, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கத்தரிக்கொல்லை சாவடி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ஞானாம்பாள் (வயது 63). சம்பவத்தன்று ஞானாம்பாள் வீட்டு அருகே உள்ள தென்னந்தோப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தென்னையை தாக்கும் வண்டுகளை ஒழிக்க மருந்து வைப்பதாக கூறினர். அதை நம்பிய மூதாட்டி ஞானாம்பாள் அவர்களிடம் விவரம் கேட்டு கொண்டிருந்தார். அப்போது ‘திடீர்‘ என்று அந்த 2 வாலிபர்களும் பாய்ந்து ஞானாம்பாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஞானாம்பாள், பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேர் கைது
இந்தநிலையில் பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் ஆலடிக்குமுளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மூதாட்டி ஞானாம்பாள் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை வளவன்புரம் டாஸ்மாக் கடை எதிரே திருடியதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த ஜான்பாட்சா மகன் கவுஸ்பாட்சா (வயது 31), தம்பிக்கோட்டை வயல்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பாலகுமார் (27) என்றும், கவுஸ்பாட்சா பெயிண்டராகவும், பாலகுமார் வெல்டராகவும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மூதாட்டியிடம் பறித்த தங்க சங்கிலியையும், அவர்கள் வைத்திருந்த திருட்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


0 comment(s) to... “மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு 2 பேர் கைது”