இணையதளம் மூலம் பட்டா மாறுதல் திட்டம் கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்
Posted October 07, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை கலெக்டர்
பட்டா மாறுதல் பெறும் திட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பட்டா மாறுதல் திட்டம் தொடக்கவிழா நடந்தது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பட்டாமாறுதல் ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவையாறு தாலுகாவில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இணையதளம் மூலம் பட்டா மாறுதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருவையாறு தாலுகாவில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் கிரயம் பெற்றுள்ள இடங்களுக்கு(புன்செய், நன்செய்) பட்டா மாறுதல் பெற பத்திர நகல்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இயங்கி வரும் சேவை மையம் அல்லது தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யின் இ.சேவை மையத்தில் மனு செய்யலாம்.
கூட்டு பட்டா மாறுதல், உட்பிரிவு செய்து பட்டாமாறுதல் ஆகிய இனங்களுக்கு பட்டாமாறுதல் செய்து கொள்ளலாம். பட்டாமாறுதல் செய்து கொள்ள ஒரு மனுவிற்கு ரூ.50 என கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. திருவையாறு தாலுகாவில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணித்து மாவட்டத்தில் உள்ள இதர தாலுகாவிலும் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மனுக்களை வழங்கி பட்டா மாறுதலை பெற்று பயன்பெறுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன், நிலஅளவைத்துறை உதவி இயக்குனர் குழந்தைவேலு, வருவாய் கோட்ட அதிகாரி ஜெய்பீம், தேசிய தகவலியல் மைய அலுவலர் ஸ்டான்லி மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.
0 comment(s) to... “இணையதளம் மூலம் பட்டா மாறுதல் திட்டம் கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்”