பேராவூரணி, அக். 16–
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறார். நேற்று அவர் தஞ்சை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.
இரவு 10.25 மணிக்கு பேராவூரணி வேதாந்தம் திடல் அருகே மு.க.ஸ்டாலின் வேனில் இருந்தவாறு பேசினார். அப்போது கூறியதாவது:–
முடியட்டும் விடியட்டும் பயணமாக உங்களை நேரடியாக தேடி நாடி வந்துள்ளேன். இந்த முழக்கம் தமிழகம் முழுக்க ஒலிக்க தொடங்கி விட்டது. ஜெயலலிதா ஆட்சி முடியட்டும். தி.மு.க. ஆட்சி விடியட்டும் என்பது தான் இதன் அர்த்தம்.
இந்த பயணம் மூலமாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி வருகிறேன்.
நடைபயணம் மட்டும் இன்றி வேன், டிராக்டர், ஸ்கூட்டர் ஆகியவற்றில் சென்று எல்லா மக்களையும் சந்தித்து வருகிறேன். சட்டமன்றத்தில் (சென்னையில்) எனது பயணம் முடிகிறது.
இந்த பயணத்தால் எல்லா கட்சிகளும் ஆடிபோய் கிடக்கிறது. எதிர்கட்சி, உதிரி கட்சி ஆடிபோய் இருக்கிறது. அ.தி.மு.க. அரண்டு கிடக்கிறது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துடன் அ.தி.மு.க. அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க போர்டு வைத்துள்ளனர். அது ஜெயலலிதாவே என்னை வரவேற்பது போல் உள்ளது.
4 வருட ஜெயலலிதா ஆட்சியில் எந்த திட்டமாவது நிறைவேற்றப்பட்டதா? தஞ்சை மாவட்டத்தில் 48 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பணிகள் நடைபெற்றதா?. விவசாயிகளுக்கு மானியம் கிடைத்ததா? மல்லிப்பட்டினத்தில் ரூ. 68 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றார்கள். வந்ததா?
கலைஞர் ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் தரப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் முதல் முறையாக தர்மபுரியில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. அவர்களுக்கு சுழல் நிதி மற்றும் வங்கி கடன் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. மத்திய அரசின் பாதுகாப்பை நீதிபதிகள் கேட்கும் அளவுக்கு சட்டம் சீர்குலைந்து கிடக்கிறது.
இது பற்றி ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். ஓய்வு எடுக்க வேண்டிய நாங்கள் (தி.மு.க.வினர்) ஆய்வு செய்து வருகிறோம்.
பேராவூரணியில் ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவரை யாராவது பார்த்தது உண்டா? இந்த தொகுதியின் எம்.பி. வெற்றி பெற்ற பின் நன்றி சொல்ல வந்தாரா? எம்.எல்.ஏ. இல்லை. எம்.பி.யை பார்க்கவில்லை.
சினிமாவில் வரும் வசனம் போல் அறிவிப்புகள் வருகிறது. இதுவரும் ஆனால் வராதது போல் உள்ளது.
இப்படிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2016–ல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி தர வேண்டும். அரசியல்வாதிகள் தான் மக்களை தேடி வர வேண்டும். மக்கள் அவர்களை தேடி போகவேண்டியதில்லை.
2016ல் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியை பேராவூரணியில் காண்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
இரவு நடைபயணத்தை முடித்த மு.க.ஸ்டாலின் பேராவூரணியில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் தங்கினார். இன்று காலை அங்கிருந்து சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், துவரங்குறிச்சி, மதுக்கூர் வழியாக திருவாரூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.